Type Here to Get Search Results !

ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு (10th தமிழ் பழைய புத்தகம் இயல் 2)

2
சிலப்பதிகாரம்.
ஆசிரியர் குறிப்பு :
• இளங்கோவடிகள் சேரமரபினர்.
• இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோணை.
• இவர்தம் தமையன் சேரன் செங்குட்டுவன்.
• இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும்பொருட்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
• இளங்கோவடிகள் அரசியல் வேறுபாடு கருதாதவர்; சமய வேறுபாடற்ற துறவி.
• இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
• இளங்கோவடிகளின் சிறப்புணர்ந்த பாரதியார், "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனப் புகழ்கிறார்.
நூற்குறிப்பு :

• சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.
• கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
• சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெருங் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது;
• புகார்க்காண்டம் பத்துக் காதைகளையும், மதுரைக்காண்டம் பதின்மூன்று காதைகளையும், வஞ்சிக்காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது. இஃது, 'உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்' எனவும் வழங்கப்பெறும்.
• முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றிப் புகழ்வர்.
• "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு" எனப் பாரதியாரால் போற்றப்பட்டது இக்காப்பியம்.
• நம் பாடப்பகுதி யாகிய வழக்குரை காதை, மதுரைக்காண்டத்தின் பத்தாவது காதையாகும்.
• சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் முதன்மையானது சிலப்பதிகாரம்.
• காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்ட சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என வழங்குவர்.
• இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
நூலெழுந்த வரலாறு :

• சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
• அங்கிருந்த மலைவாழ் மக்கள், "வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண்தெய்வத்தைப் பார்த்தோம்" என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார், "அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்" என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
• அதனைக் கேட்ட இளங்கோவடிகள், "இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்" என்று கூறினார். சாத்தனாரும், 'அடிகள் நீரே அருளுக' என்றார். இவ்வாறே சிலப்பதிகாரம் உருவாயிற்று.
நூற்பயன் :

• "அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்னும் முப்பெரும் உண்மைகளைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.

பாரதிதாசன்
ஆசிரியர் குறிப்பு:
• பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
• இவர், 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.
• தந்தை கனகசபை, தாய் இலக்குமி. பாரதியின்மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
• இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் ஆகிய சிறப்புப்பெயரால் வழங்கப்படுகிறார்.
• குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகளாம்.
• பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.
• தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது;
• ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது;
• திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham