| 8th தமிழ் இயல் - 1 எழுத்துகளின் பிறப்பு |
|---|
|
● அ, உ, க, ப -ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். ● வாயைத் திறந்து ஒலித்தாலே அ என்னும் எழுத்து ஒலிக்கிறது. ● உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன. ● நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது. ● ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. பிறப்பு ● உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். ● எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர். எழுத்துகளின் இடப்பிறப்பு ● உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ● வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ● மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ● இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ● ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு உயிர் எழுத்துகள் ● அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. ● இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. ● உ,ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன. மெய் எழுத்துகள் ❖ க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. ❖ ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. ❖ ட், ண் - ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. ❖ த், ந் - ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன. ❖ ப், ம் - ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன. ❖ ய் - இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது. ❖ ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன. ❖ ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது. ❖ ள் - இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது. ❖ வ் - இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது. ❖ ற், ன் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன. சார்பெழுத்துகள் ● ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. ● பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன. |
| Book Back |
|---|
|
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ [விடை : ஆ) உ, ஊ] 2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் --------- அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு [விடை : இ) தலை] 3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து [விடை : ஆ) மார்பு] 4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம் [விடை : இ) ட், ண்] 5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து --------- . அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ் [விடை : ஈ) வ்] பொருத்துக. 1. க், ங் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை. 2. ச், ஞ் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி. 3. ட், ண் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி. 4. த்,ந் – ஈ) நாவின் நுனி, அண்ணத்தின் நுனி. விடை 1. க், ங் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி. 2. ச், ஞ் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை 3. ட், ண் – ஈ) நாவின் நுனி, அண்ணத்தின் நுனி. 4. த்,ந் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி. |

minnal vega kanitham