நூல் வெளி |
---|
பாரதியார்
• மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; • எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; • குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; • இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; • இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. தெரிந்து தெளிவோம் • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. • ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். • இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.. முல்லைப்பாட்டு • முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. • இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1 - 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். ப.சிங்காரம் • புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி. • இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 - 1997). • இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. • அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். • அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. • ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். • வேலைக்காக இந்தோனேசியா சென்றார். • மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். • இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார். |
கலைச் சொல் அறிவோம் |
---|
• Storm - புயல்
• Tornado – சூறாவளி • Tempest - பெருங்காற்று • Land Breeze - நிலக்காற்று • Sea Breeze - கடற்காற்று • Whirlwind – சுழல்காற்று |
இலக்கணக்குறிப்பு |
---|
• மூதூர் - பண்புத்தொகை
• உறுதுயர் - வினைத்தொகை • கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை • தடக்கை - உரிச்சொல் தொடர் |
சொல்லும் பொருளும்: |
---|
• மயலுறுத்து - மயங்கச்செய்
• ப்ராண - ரஸம் - உயிர்வளி • லயத்துடன் – சீராக • நனந்தலை உலகம் - அகன்ற உலகம் • நேமி - சக்கரம் • கோடு - மலை • கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல் • நறுவீ - நறுமணமுடைய மலர்கள் • தூஉய் - தூவி • விரிச்சி - நற்சொல் • சுவல் – தோள் |
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. |
---|
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணீற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் : ஆல மலர் : பலா மலர்
மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர்; பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி; ஆலம்; கொழிஞ்சி; பலா.
பயன்பாடு, நாற்றம் மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை, குரீ இப்
பூளை, இலுப்பைப்பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாக அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
- கோவை. இளஞ்சேரன்
வினா : 1. மலர் உண்டு; பெயரும் உண்டு - இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக. 2. அரும்பாகி மொட்டாகி பூவாகி ..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக. 3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக. 4. அரிய மலர் - இலக்கணக் குறிப்புத் தருக. 5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும் பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். விடை : 1. மலருக்குப் பெயர் உண்டு 2. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். 3. பாதிரிப்பூ - குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும் உடல் நலத்தைப் பெருக்கி குளிர்ச்சியூட்டும். முருங்கைப்பூ - இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும் குடித்துவர நீரழிவு நோய் ,நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும். 4. அரிய மலர் - குறிப்புப் பெயரெச்சம் 5. மறத்தின் - மரத்தின், பரித்து - பறித்து, மனத்தை - மணத்தை |
minnal vega kanitham