Type Here to Get Search Results !

Day 37 New syllabus அடிப்படையில் 10th தமிழ் இயல் - 2

0
நூல் வெளி
பாரதியார்
• மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்;
• எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
• குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்;
• இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
• இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
தெரிந்து தெளிவோம்
• உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
• ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
• உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.
• இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..
முல்லைப்பாட்டு
• முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
• இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1 - 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
• முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது;
• முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
• இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
ப.சிங்காரம்
• புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
• இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 - 1997).
• இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
• அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம்.
• அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
• ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
• வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.
• மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.
• இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

கலைச் சொல் அறிவோம்
• Storm - புயல்
• Tornado – சூறாவளி
• Tempest - பெருங்காற்று
• Land Breeze - நிலக்காற்று
• Sea Breeze - கடற்காற்று
• Whirlwind – சுழல்காற்று

இலக்கணக்குறிப்பு
• மூதூர் - பண்புத்தொகை
• உறுதுயர் - வினைத்தொகை
• கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை
• தடக்கை - உரிச்சொல் தொடர்

சொல்லும் பொருளும்:
• மயலுறுத்து - மயங்கச்செய்
• ப்ராண - ரஸம் - உயிர்வளி
• லயத்துடன் – சீராக
• நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
• நேமி - சக்கரம்
• கோடு - மலை
• கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
• நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
• தூஉய் - தூவி
• விரிச்சி - நற்சொல்
• சுவல் – தோள்

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணீற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் : ஆல மலர் : பலா மலர் மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர்; பாங்கர் மலர். அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி; ஆலம்; கொழிஞ்சி; பலா. பயன்பாடு, நாற்றம் மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை, குரீ இப் பூளை, இலுப்பைப்பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாக அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும். - கோவை. இளஞ்சேரன்
வினா :
1. மலர் உண்டு; பெயரும் உண்டு - இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
2. அரும்பாகி மொட்டாகி பூவாகி ..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.
4. அரிய மலர் - இலக்கணக் குறிப்புத் தருக.
5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும் பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
விடை :
1. மலருக்குப் பெயர் உண்டு
2. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்.
3. பாதிரிப்பூ - குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும் உடல் நலத்தைப் பெருக்கி குளிர்ச்சியூட்டும். முருங்கைப்பூ - இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும் குடித்துவர நீரழிவு நோய் ,நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும்.
4. அரிய மலர் - குறிப்புப் பெயரெச்சம்
5. மறத்தின் - மரத்தின், பரித்து - பறித்து, மனத்தை - மணத்தை

கருத்துரையிடுக

0 கருத்துகள்